Search Posts

சமைக்க தெரியாத மனைவியை அடிக்கலாமா?

கூடாது.

பொருளாதாரத்தைத் திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவை சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், நபி (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள்.

உணவு சரியாக சமைக்கத் தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் மூலமாகக் கூட நல்ல உணவைச் சமைத்து தம் கணவருக்குக் கொடுத்துள்ளார்கள்.

என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும் போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அறிவிப்பவர் : அஸ்மா (ரலி).

நூல் : புகாரி (5224)

உணவு சரியாக சமைக்கத் தெரியாத பெண்கள் முயற்சி செய்து நல்ல உணவைச் சமைப்பதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சமைக்கத் தெரியாது என்பதற்காக அவர்களை அடிப்பதற்கோ, அல்லது உறவு கொள்வதை முறித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. தமக்குக் கட்டுப்படாமல் விவாகரத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலைக்கு பிணக்குகள் ஏற்பட்டால்தான் அடிப்பது மற்றும் உறவு கொள்வதை நிறுத்துவதும் கூடும்.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவ னாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:34)