Search Posts

குர்ஆன் தெளிவு – படுத்துகிறது

‘ஏழ்மை’ ‘ வறுமை’ போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப் படுகிறது. நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழ வேண்டும், நமக்கு எந்தச் சோதனைகளும் ஏற்படவே கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர்.

இன்றைக்கு உலகில் நடைபெறும் கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை, அதிகமான செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் செய்யப்படுகின்றன  இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயரில் வட்டி மூஸாக்கள் பிறர் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதற்குக் காரணமும் இந்த வறுமையைப் பற்றிய பயம் தான். பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அதிகமான பெற்றோர்களின் முகங்கள் வாடி விடுகின்றன. சில இடங்களில் வயிற்றில் பெண் குழந்தை கருவுற்றிருக்கிறது என்று தெரிந்து விட்டாலே கருவிலேயே சிசுவை அழிக்கக் கூடிய மாபாதகச் செயலில் இறங்கி விடுகின்றனர்.

இன்னும் சிலர் பிறந்த உடனேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் உயிரோடு மாய்த்து விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? நாம் ஏழையாக இருக்கின்றோமே, இவள் வளர்ந்து ஆளாகி விட்டால் வரதட்சணை கொடுப்பதற்கு எங்கே செல்வது? என்ற பயம் தான்.

ஏழைப் பெண் என்றால் அவளுடைய கற்பிற்கே பாதுகாப்பில்லாத பயங்கரவாத நிலைமை இன்றைக்கு உலகை ஆட்டிப் படைக்கிறது. அன்று முதல் இன்று வரை வலியவனுக்கு ஒரு நீதி, எளியவனுக்கு ஒரு நீதி என்ற வகையில் நீதி விலை பேசப்படுகிறது. பெண்கள் தங்களுடைய வெட்கம்,

மானங்களையெல்லாம் இழந்து, கற்பை விலைபேசி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதற்குக் காரணமும் இந்த வறுமையின் கோரத் தாண்டவம் தான்.
இப்படி வறுமை பல விதங்களில் இந்த மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது. இப்படி வறுமையின் மூலம் அச்சுறுத்தி மனித சமுதாயத்தை வழிகெடுத்து, தவறான காரியங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடியவன் அல்லாஹ்வுடைய எதிரியாகிய ஷைத்தான் தான். இறைவன் இதனை தன் திருமறையில் தெளிவாகக் கூறுகின்றான்.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்ளூ அறிந்தவன் (2:268)
இந்த வறுமையின் காரணமாக இந்த மனித சமுதாயம் தடம் புரண்டு விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உறுதியான நம்பிக்கை
செல்வம் வரும் போது தடம் புரண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், வறுமை வரும் போது சோர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் உறுதியான நம்பிக்கையை நம்முடைய மனதில் பதிய வைக்கிறது. அதாவது செல்வத்தைத் தருபவனும், வறுமையைத் தருபவனும் இறைவன் தான் என்பதை உறுதியாக நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சி யடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை (6:26)
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:37)
எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்கு வோரில் சிறந்தவன் என்று கூறுவீராக! (34:39)
வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (42:12)
அதாவது செல்வத்தையும், வறுமையையும் தருபவன் இறைவன் தான் என்ற உண்மையை ஆணித் தரமாக மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் இதனைத் தன்னுடைய மனதில் பதிய வைத்துக் கொண்டான் என்றால் செல்வம் வரும் போது வரம்பு மீறவும் மாட்டான். வறுமையின் காரணமாக தடம் புரளவும் மாட்டான்.
இறை நம்பிக்கையின் அடையாளம் வறுமை
அல்லாஹ் தனது அடியார்களை, அவர்கள் தன் மீது எந்த அளவிற்கு உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று பரீட்சிப்பதற்காக வறுமையின் மூலமும் சோதிப்பான். இப்படிப்பட்ட சோதனைகளில் பொறுமையைக் கையாண்டு, உறுதியோடு, நெறி தவறாமல் உண்மை வழியில் நடப்பது தான் நமக்கு மறுமையில் சுவன பாக்கியத்தைப் பெற்றுத் தரும். அல்லாஹ் கூறுகிறான்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2:155)

வறுமையான காலகட்டங்களில் பொறுமையைக் கடைபிடிப்பது தான் உண்மையான இறை நம்பிக்கையாளர் களுக்குரிய பண்பாகும். இதையும் திருமறைக் குர்ஆன் தெளிவு படுத்துகிறது.
….வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (2:177)
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அபூ ஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்’ என்று கூறினார்கள்.