—————
இறைவனைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தவறிழைப்பவர்கள் என்று நம்புவதுதான் இறைநம்பிக்கை. அந்த அடிப்படையில் நபித்தோழர்கள் உட்பட அனைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
உயிருள்ளவர்கள் அழுவதால் மய்யித்திற்கு வேதனை செய்யப்படுகிறது என்ற உமர் (ரலி) அவர்களின் கருத்தை மறுத்த பின்னர் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 43)
لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ قَالَتْ إِنَّكُمْ لَتُحَدِّثُونِّى عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلاَ مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ.
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது “நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது” என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 1693)
நம்பகத் தன்மையில் முதலிடம் இருக்கும் நபித்தோழர்களுக்கே தவறு வரும் என்றால் புகாரி இமாமுக்கோ அல்லது அவர்கள் நூலில் உள்ள அறிவிப்பாளர்களுக்கோ தவறு வராதா?
நம்பகமான அறிவிப்பாளர்களிடமும் தவறு வர வாய்ப்புள்ளது என்பதை மிகத் தெளிவாக ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான தத்ரீபுர் ராவீ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
تدريب الراوي – (1 / 75)
( وإذا قيل ) هذا حديث ( صحيح فهذا معناه ) أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد ( لا أنه مقطوع به ) في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة
ஒரு செய்தியை இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்லப்பட்டால் அதன் பொருள், அறிவிப்பாளர் வரிசை இணைந்து நாம் கூறிய நிபந்தனைகள் அதில் உள்ளன என்பதாகும். எனவே வெளிப்படையான அறிவிப்பாளர் வரிசையைக் கவனத்தில் கொண்டு நம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது முழுக்க முழுக்க சரியான செய்தி என்பது பொருள் அல்ல. ஏனெனில் நம்பகமானவருக்கும் தவறும் மறதியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்.
(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம்: 1, பக்கம்: 75)
நம்பகமான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்று தெளிவாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
الموضوعات لابن الجوزي – (1 / 106)
واعلم أنه قد يجئ في كتابنا هذا من الاحاديث ما لا يشك في وضعه، غير أنه لا يتعين لنا الواضع من الرواة، وقد يتفق رجال الحديث كلهم ثقاة والحديث موضوع أو مقلوب أو مدلس،
அறிந்து கொள்: இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லாத செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும். ஆனால் அறிவிப்பாளரில் இட்டுக்கட்டியவர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் சிலவேளை எதார்த்தமாக அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக அமைந்து விடுவர். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாக அல்லது புரட்டப்பட்டதாக அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டதாக இருக்கும்.
நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106