Search Posts

ஒரு செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தால் அதைப் படிக்கும்போது நபிகளார்

ஒரு செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தால் அதைப் படிக்கும்போது நபிகளார் பொய் சொல்லி விட்டார்கள் என்ற மிகப்பெரிய அவதூறு சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டி வரும். இதனால்தான் ஹதீஸ்கலை வல்லுநர்கள் அறிவுக்குப் பொருந்தாத செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.

நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை இனம் காட்டியவர்களில் முதன்மையானவரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

الموضوعات لابن الجوزي – (1 / 106)

فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.

நீர் பார்க்கும் ஒவ்வொரு ஹதீஸும் அறிவுக்கு முரணாக அமைந்திருந்தால் அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாக அமைந்திருந்தால், விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.எனவே அந்தச் செய்தி தகுதியானதா (என்று ஆய்வு செய்து) சிரமப்படாதே. (நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106)

இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ஹிஜ்ரி 510 ல் பிறந்தவர்கள். அவர்கள் காலத்திலேயே இந்தக் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்தக் கருத்தை பல ஹதீஸ் கலை நூல்களிலும் எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் இதே கருத்தை வேறு வார்த்தைகளில் எழுதியுள்ளார்கள்.

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளும் முறைபற்றி குறிப்பிடும்போது

تدريب الراوي – (1 / 276)

عن الخطيب عن أبي بكر بن الطيب أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة

அறிவுக்குப் பொருந்தாமல் இருப்பதும், ஏற்றுக் கொள்ளும் வகைளில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருப்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கண்டறிவதற்கான சான்றுகளில் ஒன்றாகும். ஐம்புலன்களும், நேரடி காட்சிகளும் எதை மறுக்குமோ அதுவும் இட்டுக்கட்டப்பட்டதில் சேரும்.

(தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் (276)

அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக, அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருந்தால் அந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படை விதி நாம் உருவாக்கியது கிடையாது. ஹதீஸ்கலை மேதைகள் உருவாக்கியதுதான் என்பதை மறுக்க முடியாது.

 

பார்த்தவுடன் தெரியும் பொய்ச் செய்திகள் அரபியை ஏசுபவன் இணை வைப்பாளனா?

சல்மான், நான்காம் ஆண்டு மாணவர், இஸ்லாமியக் கல்லூரி

شعب الإيمان – (3 : 161)

أَخْبَرَنَا أَبُو سَهْلٍ مُحَمَّدُ بْنُ نَصْرَوَيْهِ الْمَرْوَزِيُّ، حدثنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ الطَّغَامِيُّ، حدثنا أَبُو شِهَابٍ مَعْمَرُ بْنُ مُحَمَّدٍ الصُّوفِيُّ، حدثنا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حدثنا مُطَرِّفُ بْنُ مَعْقِلٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ سَبَّ الْعَرَبَ فَأُولَئِكَ هم الْمُشْرِكُونَ ” ” تَفَرَّدَ بِهِ مُطَرِّفٌ هَذَا، وَهُوَ مُنْكَرٌ بِهَذَا الْإِسْنَادِ ”

யார் அரபுகளைத் திட்டுகிறாரோ அவர்கள் இணை வைத்தவர்கள் ஆவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தி شعب الإيمان;  என்ற நூலில் 3ஆம் பாகம் 161ஆம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பார்த்தவுடனே இது பொய்யான செய்தி என்பதை நாம் அறிய முடியும்.

இந்தச் செய்தி அரபியர்களை உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களை மட்டமாகவும் சித்தரிக்கிறது. எந்தளவிற்கென்றால், இறைவனுக்கு இணை வைத்தவரும் அரபியர்களை திட்டுபவர்களும் சமம் என்று சொல்லும் அளவிற்கு இந்தச் செய்தி அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒரு போதும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்மால் கூற முடியும்.

மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே. அவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்ற அடிப்படைக் கருத்தை மறுக்கும் விதமாக இது உள்ளது.

இன வெறியை எதிர்க்கும் இஸ்லாம்:

இஸ்லாம் மார்க்கம் தனிச் சிறப்பு பெற்றிருப்பதற்குக் காரணமே மக்கள் அனைவரும் சமம். நிறத்தாலோ, குலத்தாலோ, பாரம்பரியத்தாலோ, மொழியாலோ எவரும் சிறந்தவர் அல்ல என்று அல்லாஹவின் தூதர் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தினார்கள்.

مسند أحمد بن حنبل – (5 : 411)

حدثنا عبد الله حدثني أبي ثنا إسماعيل ثنا سعيد الجريري عن أبي نضرة حدثني من سمع : خطبة رسول الله صلى الله عليه و سلم في وسط أيام التشريق فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد إلا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே உங்களுடைய இறைவன் ஒருவனே. உங்கள் தந்தை ஒருவரே எந்த அரபிக்கும் அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. வெள்ளையனை விட கருப்பனுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. கருப்பனை விட வெள்ளையனுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. என்றார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், பாகம்: 5, பக்கம்: 411

மேலும் இறைவன் தன்னுடைய திருமறையில் இனத்தால் உயாந்தவர். சிறந்தவர் அல்ல. மாறாக இறையச்சத்தால் உயர்ந்தோரே உங்களில் சிறந்தவர் என்று கூறுகிறான்.

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன் நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இஸ்லாம் உருவத்தையோ, மொழியையோ பார்க்காமல். இறையச்சத்தை மட்டும்தான் பார்க்கிறது. இதன் காரணமாகத்தான் அடிமை குலத்திலிருந்த பிலால் (ரலி)யை பள்ளிவாசலுக்கு மக்களை அழைக்கும் அழைப்பாளராக நிறுத்தி அழகு பார்த்தது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் கருத்துப்படி அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்காமலேயே இது இட்டுக்கட்டப்பட்டது என்று கூறிவிடலாம்.

الموضوعات لابن الجوزي – (1 / 106)

فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.

நீர் பார்க்கும் ஒவ்வொரு செய்தியும் அறிவுக்கு முரணாகவோ, அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாகவோ அமைந்திருந்தால் விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று. எனவே அதன் நம்பகத் தன்மையை (ஆய்வு செய்ய) சிரமத்தை எடுத்துக் கொள்ளாதே.

நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106

என்றாலும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையிலும் கோளாறு இருப்பதைக் காணமுடிகிறது. இந்த அறிவிப்பில் இடம் பெறக்கூடிய முதர்ரிஃப் பின் மஃகில் என்பவர் இவரைப் பற்றி ஹதீஸ்கலையில் மறுக்கப்பட்டவர் என்றும் இட்டுகட்டக் கூடியவர் என்றும் இமாம் உகைலீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரும் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்தச் செய்தியை இவர் மட்டும் தான் தனித்து அறிவிக்கிறார்.

ஆதாரம் : லுஅஃபா பாகம் 4 பக்கம் 217, லிஸானுல் மீஸான் பாகம் 8 பக்கம் 83, மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 157