Check my link whether opens
இஷ்ரத் ஜஹான் தீவிரவாதியா?
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தில் ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 15 ஜூன், 2004 அதிகாலை இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷாய்க் என்னும் பிரணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நான்கு பேரின் சடலங்கள் அகமதாபாத் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன.
மோடியைக் கொல்வதற்காக வந்த தீவிரவாதிகள்தான் இவர்கள். இவர்களைத் தடுத்து நிறுத்தும் போது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.ஜி. வன்சாரா தெரிவித்தார்.
ஆனால் காவல்துறையின் வாதத்தைத் தடயவியல் ஆய்வுகளும், மருத்துவப் பரிசோதனைகளும் நிராகரித்துவிட்டன. அரை மணி நேரத்துக்கு மேல் மோதல் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட அந்த நெடுஞ்சாலையில் அப்படி ஒரு போராட்டம் நடைபெற்றதற்கான எந்த ஒரு சுவடும் காணப்படவில்லை. நான்கு பேர் கொல்லப்பட்ட பிறகும் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை, சாட்சியங்களைப் பதிவு செய்யவில்லை. வழக்கு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை.
இந்த அசாதாரணமான செயல் (அல்லது செயலற்ற தன்மை) இயல்பாகவே பல சந்தேகங்களை நாடு முழுக்கக் கிளப்பிவிட்டது.
பல போராட்டங்களுக்குப் பிறகு விசாரணை ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டு முதன்முறையாக அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கை, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் 12 ஜூன் 2004 அன்று கடத்தி வரப்பட்டு, காவல்துறைக் கண்காணிப்பில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இரண்டு தினங்கள் கழித்தே சடலங்கள் நெடுஞ்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தது. வன்சாரா தொடங்கி 22 காவல் துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை சிபாரிசு செய்தது.
செப்டம்பர் 2010ல் குஜராத் உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமித்தது. நடைபெற்றது மோதல் அல்ல, திட்டமிட்ட படுகொலைதான் என்று குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்ஐடி உறுப்பினருமான சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார். அரசியல் தலையீடு காரணமாக வழக்கை நடத்த முடியவில்லை என்றும் அவர் வருந்தினார். பிகார் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட மற்றொரு எஸ்ஐடி குழுவும், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தியது. வழக்கை விசாரித்த சிபிஐயும் இதே முடிவுக்குதான் வந்து சேர்ந்தது.
பிறகு கைதுப் படலங்கள் தொடங்கின. இஷ்ரத் ஜஹான் வழக்கு மட்டுமின்றி வேறு பல என்கவுன்டர் வழக்குகளிலும் வன்சாராவுக்குத் தொடர்பு இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தான் பதவி விலகியபோது எழுதிய கடிதத்தில், அமித் ஷா தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும் மோடியையே தான் நம்பியிருப்பதாகவும் வன்சாரா குறிப்பிட்டிருந்தார். தன்னை ஓர் இந்து தேசியவாதி என்று அறிவித்துக் கொண்ட வன்சாரா, மோடியைக் கடவுள் என்று அழைத்திருந்தார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்னும் பட்டப்பெயரைப் பெற்றிருந்த வன்சாரா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தபோது, குஜராத் சிங்கம் என்று ஆரவாரத்துடன் முழங்கி, மாலை மரியாதையுடன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
இது இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் கொல்லப்பட்ட பின்னணி. இவர் கொல்லப்பட்ட பின்னர் நடுநிலையாளர்கள் மோடியை மோசக்கார கொலையாளியாக பார்க்கத் தொடங்கினர். இதைத் துடைப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்த மோடிக்கு கிடைத்த வாய்ப்புதான் ஹெட்லியின் வாக்கு மூலம்.
2008 மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படுபவர் டேவிட் ஹெட்லி. அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரித்த போது இர்ஷத் ஜஹான் என்ற பெண்மணி லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று வாக்கு மூலம் அளித்தாராம்.
ஹெட்லி வாக்கு மூலம் அளித்தாரா அல்லது நிர்பந்திக்கப்பட்டு வாக்கு மூலம் தந்தாரா என்று கேள்வி அவரிடம் விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞரான உஜ்வல் நிகம் அவரின் கேள்வியும் ஹெட்லியும் பதிலும் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
உஜ்வல் நிகம் : லஷ்கர் இ தொய்பாவில் பெண்களும் இருக்கிறார்களா?
ஹெட்லி : ஆம்
உஜ்வல் நிகம் : பெண் தற்கொலைப் போராளிகளும் இருக்கிறார்களா?
ஹெட்லி : எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது.
உஜ்வல் நிகம் : இந்தியாவில் லஷ்கர் ஏதேனும் திட்டத்துடன் வந்து அது நிறைவேறாமல் போனது பற்றி ஏதாவது தெரியுமா?
ஹெட்லி : ஆமாம், அப்படியொரு திட்டம் இருந்ததாகவும் அது காவல் துறையினரால் முறியடிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் என்றும் தெரிந்து கொண்டேன்.