நோன்பின் மாண்புகள்
நோன்பின் மாண்புகள்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)
நம்மிடம் இறையச்சத்தை ஏற்படுத்துவற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இந்த நோன்பின் சிறப்புகள், இதனால் மறுமையில் கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம்.
சிறப்பு நுழைவு வாயில்
சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூற்கள்: புகாரி 1896, 1897, முஸ்லிம் 1947
சுவனத்தில் வாசல் திறப்பு; நரக வாசல் அடைப்பு
ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1899
நோன்பு ஒரு கேடயம்
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1894
மணமான வாசனையும் மகத்தான கூலியும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். “எனக்காக நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகின்றார். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1894
நோன்பாளியின் இரு மகிழ்ச்சிகள்
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1904
இறைவனுக்குரிய அமல்
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1904
ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 695
முன் பாவங்கள் மன்னிக்கப்படுதல்
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 38
ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, (தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 344
ஆகவே, இந்த நோன்பை சரியான முறையில் நோற்று, அதன் நன்மைகளை இறைவனிடத்தில் முழுடையாக பெறக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
நோன்பின் மாண்புகள். எம். ஷம்சுல்லுஹா