Search Posts

ஏகத்துவக் கொள்கை – இன்று

ஏகத்துவக் கொள்கை தமிழகம் உட்பட பல நாடுகளில் உள்ளது. இதை உள்ளபடி தெளிவாகச் சொன்ன ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த ஜமாஅத்தின் தன்னலமற்ற மார்க்கச் சேவையினால் ஏராளமான மக்கள் இந்தக் கொள்கையின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அசத்தியக் கொள்கையில் இருக்கும் அமைப்புகள் ஆட்டம் காண, இந்த நிலையை தொடரவிடக் கூடாது என்று ஏராளமான அவதூறுகளை அள்ளி நம் மீது வீசுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டம் என்று நம்மைக் குறிப்பிடுவது.

பரலேவிகள், சலபுகள், ஜாக் போன்ற இயக்கங்கள் இத்தகைய அவதூறுகளைச் சொல்லும் சில அமைப்புகளாகும்.

தமிழகத்தில் இணைவைப்புக் கொள்கை நிறைந்து, மார்க்கம் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இன்று எண்ணற்ற மக்கள் திருக்குர்ஆன், நபிமொழிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்தப் பணி தொய்வின்றி நடந்து வருகின்றது.

மறந்திருந்த, மறைக்கப்பட்ட ஏராளமான நபிவழியை உயிர்ப்பித்திருக்கின்றோம்.

ஆனால் நபிமொழிகளைப் பகிரங்கமாக புறக்கணிக்கும் கூட்டமும், நபிமொழிகளைக் கேலி செய்யும் கூட்டமும், நபிமொழிகளை அலட்சியப்படுத்தும் கூட்டமும் நம் மீது அவதூறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

ஹதீஸ்களை நாம் மறுத்தோமா?

நாம்  நபிமொழிகளை மறுக்கிறோம் என்று மக்களிடம் பேசிவரும் கும்பலைப் பார்த்துக் கேட்கிறோம். நாங்கள் ஹதீஸ்கள் என்று நம்பிய செய்திகளை மறுக்கிறோமா? அல்லது அது நபிமொழி அல்ல என்று கூறி மறுக்கிறோமா?

ஒருவன் நபிமொழி என்று தெரிந்து கொண்டு, அதை நம்பிக் கொண்டும் அதன்படி செயல்பட மாட்டேன், ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று கூறலாம்.

ஆனால் ஏராளமான ஆதாரப்பூர்மான நபிமொழிகளை நடைமுறைப் படுத்திவிட்டு, நபிமொழி என்று சொல்லப்படும் சில செய்திகள் நபிமொழியல்ல, இது நபிகளார் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று சொல்லி அதை மறுத்தால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

சில நபிமொழிகள் என்ற பட்டியலில் உள்ள செய்தி நபிகளார் சொன்ன செய்தி அல்ல. அதற்கு இன்னென்ன காரணங்கள் என்று விளக்குகிறோம்.

நபிமொழி என்று எதைச் சொல்ல வேண்டும்?

நபிகளார் ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று கூறினால் அதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

ஒன்று அறிவிப்பாளர் தொடர்பானவை.

இரண்டு சொல்லப்படும் செய்தி தொடர்பானவை.

அதன் அறிவிப்பாளர்களும் அதன் அறிவிப்பாளர் வரிசையும், நம்பகமானவையாக இருக்க வேண்டும்.

அறிவிக்கப்படும் செய்தி குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுக்கும், திருக்குர்ஆனுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மேலும் எவ்விதத்திலும் அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அந்த செய்தி அமைந்திருக்கக் கூடாது.

இந்த இரண்டு முக்கியமான காரணங்களில் ஒன்று சரியில்லையானால் அது நபிமொழிப் பட்டியலில் இடம்பெறாது.

இந்த நிபந்தனைகளை விதித்தது யார்?

நபிமொழிகள் அறிவிப்பாளர்கள் நம்பகமானவராக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்ற விதியை நாம்தான் முதலில் கொண்டு வந்தோம் என்று சிலர் கூறுவது தவறாகும். இது ஹதீஸ் கலை நூல்களில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.

திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது

இந்த விதி நபித்தோழர்கள் காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த விதியை வைத்தே சில நபிமொழிகளை நிராகரித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அவர்கள் கூறியதாவது:

மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகள் இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கு அருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ரு (ரலி) அவர்களிடம் நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்கள் என்றார்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்து வா!’ என உமர் (ரலி) என்னை அனுப்பினார்கள்.

நாம் அங்கு சென்று பார்த்த போது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவரை என்னிடம் அழைத்து வா’ என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் மூமினின்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்’ எனக் கூறினேன்.

பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்கள் குற்றுயிராய்க் கிடந்தபோது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களல்லவா?’  என்றார்கள். உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறை நம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை.

மாறாக குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளருக்கு (காஃபிர்) வேதனை மிகுதியாக்கப்படும்’ என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ எனும் (6:164ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே என்றும் கூறினார்கள்.

இதைக் கூறி முடித்த பொழுது சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவனும் அவனே’ (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய இச்சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என்று இப்னு அபீமுலைக்கா  அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 1286, 1287 & 1288)

குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான் என்று நபிகளார் சொன்னதாக உமர் (ரலி) சொன்ன செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கும் போது, இது நபிகளாரின் சொல் அல்ல என்பதற்கு ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் என்ற குர்ஆன் வசனமே போதுமானது என்று கூறியுள்ளார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறியது நபிகளாரின் கூற்று அல்ல என்பதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு அது மாற்றமாக உள்ளது என்பதையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

இதே விதியை ஹதீஸ் கலையின் வல்லுநர்களின் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்நுக்தா என்ற நூலில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும்போது பின் வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்.

النكت على كتاب ابن الصلاح ـ محقق – (2 / 846)

ومنها: أن يكون مناقضا لنص الكتاب

இறைவேதத்திற்கு முரணாக அமைந்திருக்கும்.

நூல் அந்நுக்தா, பாகம் 2, பக்கம் 846

இமாம் நவவீ அவர்களின் அத்தக்ரீப் வத்தைஸீர் லி மஃரிபத்தில் பஷீருன் நதீர் ஃபீ உசூலில் ஹதீஸ் (சுருக்கமாக தக்ரீப் என்று கூறுவர்) என்ற ஹதீஸ் கலை நூலுக்கு விரிவுரை நூலான இமாம் சுயூத்தி அவர்களின் தத்ரீபுர்ராவீ என்ற நூலிலும் இக்கருத்து சொல்லப்பட்டுள்ளது.

تدريب الراوي – (1 / 276)

أو يكون منافيا لدلالة الكتاب القطعية

உறுதியான வேதத்தின் ஆதாரங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்.