நெல்லுக்கு ஸகாத் உண்டா?
குறிப்பிட்ட நான்கு தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். இந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இவற்றின் அறிவிப்பாளர் தொடரில் குறைகள் இருப்பதால் இவை பலவீனமடைகின்றன.
1805حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ إِنَّمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فِي هَذِهِ الْخَمْسَةِ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالذُّرَةِ رواه إبن ماجه
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தொலி நீக்கப்பட்ட கோதுமை தொலி நீக்கப்படாத கோதுமை பேரீச்சம் பழம் காய்ந்த திராட்சை கம்பு ஆகிய ஐந்து தானியங்களில் மட்டுமே ஸகாத் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
நூல் : இப்னு மாஜா (1805)
இந்தச் செய்தியில் முஹம்மது பின் உபைதில்லாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவருடைய அறிவிப்புக்களை நன்மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள் கூறியுள்ளார். இவர் எதற்கும் உபயோகப்பட மாட்டார் என இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதிம் ராஸி கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் அல்ல என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார். இவரது அறிவிப்புகள் சரியானவை இல்லை என இமாம் ஹாகிம் கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.
20985حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ يَعْنِي ابْنَ مَوْهَبٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ عِنْدَنَا كِتَابُ مُعَاذٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ إِنَّمَا أَخَذَ الصَّدَقَةَ مِنْ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ رواه أحمد
மூசா பின் தல்ஹா கூறுகிறார் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்பட்ட கோதுமை தொலி நீக்கப்படாத கோதுமை காய்ந்த திராட்சை பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது.
அஹ்மது (20985)
இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவு உள்ளது.
யமன் நாட்டு மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூசா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிய போது தொலி நீக்கப்பட்ட கோதுமை தொலி நீக்கப்படாத கோதுமை காய்ந்த திராட்சை பேரீச்சம் பழம் ஆகியவற்றிலேத் தவிர (வேறு தானியங்களில்) நீங்கள் ஸகாத் வசூலிக்காதீர்கள் என அவ்விருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹாகிம் (1397)
இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூ ஹுதைஃபா என்பவர் பலவீனமானவர் ஆவார். இவருடைய மனன சக்தியில் கோளாறு உள்ளது என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பார் என இமாம் இப்னு ஹிப்பான், இமாம் தஹபீ ஆகிய இருவரும் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் திர்மிதீ அவர்களும் பந்தார் என்பவரும் கூறியுள்ளனர்.
எனவே இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை என்று கூறக்கூடாது. எனவே நெல் உட்பட அனைத்து தானியங்களுக்கும் ஸகாத் உண்டு.