Search Posts

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!

வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது  மார்ச்  மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது  ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல் காற்றுக்கு இது வரை  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவ்விரு மாநிலங்களில் 118 டிகிரி வெயில் அடிக்கின்றது. இதன் விளைவாக கொதிக்கின்ற சட்டியில் பொறிக்க வேண்டிய முட்டையை கொதிக்கின்ற சாலையில்  பொறிக்கின்றனர். அந்த அளவுக்குக் கோடையின் வெப்பம் உக்கிரத்தை அடைந்திருக்கின்றது.

சென்ற ஆண்டு இதே கோடையில் ஆந்திராவில் 1700 பேரும், தெலுங்கானாவில் 500 பேரும் பலியாயினர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்திலும் கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு மக்கள் ஒரு சில இடங்களில் பலியாகிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கோடை வெயில்  105, 106, 107 என்று ஏறிக் கொண்டே சென்று 110 டிகிரியைத் தொட்டு விட்டது. இதன் விளைவாக ஒரு பக்கம் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் தங்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஓரிரு வேளைகள் சாப்பிடாமல்  இருந்து விட்டு போகலாம். ஆனால் இந்த வெயிலின்  வெட்கையில் மாட்டித் தவிக்க முடியாது என்று கூற ஆரம்பித்து விட்டனர்.

மற்றொரு பக்கம், “ஏழைகளுக்கு ஏற்காடு! வசதியானவர்களுக்கு   ஊட்டி’ என்று  ஒரு காலத்தில் இருந்த நிலை மாறிப் போய், இப்போது ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல், அனைவரும் இந்த  வெயிலின் உச்சககட்ட தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும், விரண்டோடுவதற்காகவும்  ஊட்டி, கொடைக்கானல் நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற எந்தக் கோடை கால உல்லாச வாசஸ்தலமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை மலைப் பகுதியில் அமைந்திருப்பவை என்று நாம் அறிந்திருக்கின்றோம்.

சமதளப் பாதையில் சாலைப் பயணம் என்பது இன்றைய காலத்தில் சவாலான பயணமாக இருக்கையில், மலைப் பாதையில் அதை விடப் பன்மடங்கு சவாலான, உயிரைப் பணயம் வைத்து, மரணத்தின்  மிக அருகில் அமைந்த ஆபத்தான பயணம் என்பதை எல்லோரும் தெரிந்திருக்கின்றார்கள்.

இந்த மலைப் பயணத்தில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன? என்பதை முதலில் பார்ப்போம்.

1. சாதாரண சாலைகளில் 50 கிலோ மீட்டரை ஒரு முக்கால் மணி நேரத்தில் கடந்து விடலாம். ஆனால் இதே தூரத்தை மலைப் பகுதியில் மூன்று மணி நேரத்தில் தான் அடைய முடியும். போக்குவரத்து பாதித்து விட்டால் நான்கைந்து மணி நேரம் கடக்க வேண்டும். இது மலைப் பகுதியில் பயணிகள் சந்திக்கின்ற முதல் சவாலாகும்.

2. மலைப் பாதையில் கற்கள், மரங்களை ஏற்றிச் செல்கின்ற கனரக  வாகனங்களின் ஓட்டுனர்கள் மது போதையில் இருந்து அல்லது ஏதோ தவறுதலாக பிரேக் பிடிக்காமல் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் போதும். கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி பின்னோக்கிப் பாய்ந்து விடும். அவ்வளவு தான் பின்னால் அடுத்து அடுத்து நிற்கின்ற வண்டிகள் பாதிப்புக்கும், பயங்கர விபத்திற்கும் உள்ளாகி விடும். பின்னால் நின்று கொண்டிருந்த காரில் அல்லது பஸ்ஸில் பயணிகளின் உயிர்களை ஒரு நொடிப் பொழுதில் பலி வாங்கி விடும். இந்தியாவில் கனரக வாகனங்கள் மலைப் பாதையில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

3. ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்த மலைப் பகுதியாகும்.  வளைந்து, வளைந்து செல்கின்ற அதிலும் குறிப்பாக தலையை சுற்றச் செய்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் கொஞ்சம் வேகமாக வாகனங்கள் சென்றால் கூட பல அடிகள் பள்ளத் தாக்கில் விழுந்து மனித உடலின் எலும்பும் வண்டி உடலின்  இரும்பும் தேறாத அளவுக்கு சுக்கு நூறாக அப்பளமாக நொறுங்கிப் போய் விடும். இந்தியாவில் மலைப் பகுதியில் செல்கின்ற வாகனங்களுக்கு எவ்வித வேகக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் கிடையாது.

4. மலைப் பாதையில் குறிப்பாக மழைக் காலங்களில் பாறைகள்  வாகனங்களின் மீது உருண்டு விழுவதற்கும், மரங்கள் சாய்ந்து விழுவதற்கும் அதிகம் அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உயிர் பறிபோகின்ற அபாயம் அதிகமாகவே காத்திருக்கின்றது.

5. சுய நலமிக்க மனிதனின் சுரண்டல் வேலையின் காரணமாக  காடுகளும் சுரண்டல்களுக்கு உள்ளாயின. அதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டு  அங்குள்ள நீர் வளங்கள் வற்றிப் போனதால் யானைகள் காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக சாலைகளுக்குள் படை எடுத்து வர ஆரம்பித்து விட்டன.  இப்படிப்பட்ட யானைகளின் பவனியும், படையெடுப்பும் மனிதனின் சாலைப் பயணத்தை சாவுப் பயணமாக மாற்றி விடுகின்றது.

6. சாதாரண சாலைகளிலேயே வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன்  சர்வ சாதாரணமாக மோதி உயிர்ப்பலிகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் மலைப் பாதையில் மோதல்களுக்குரிய சாத்தியக் கூறுகள் அதாவது சாவுக்குரிய சாத்தியக் கூறுகள் இன்னும் பன்மடங்கு பரிமாணத்தில் உள்ளன.

7. சாலைப் பயணத்தில் சில ஆண்களுக்கும், அதிகமான குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பஸ், கார் பயணங்களின் போது வாந்தி வரத்துவங்கி விடும். வளைந்து வளைந்து செல்கின்ற மலைப் பயணத்தில் வாந்திக்கும், குடலைப் புரட்டுகின்ற குமட்டல்களுக்கும் சொல்லவே வேண்டியதில்லை.  அதனால், ஊட்டி, கொடைக்கானல் பாதையில்  செல்வோர் ஆங்காங்கு கார்களை நிறுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாக, குடம் குடமாக வாந்தி எடுப்பதை அதிகம் பார்க்க முடியும்.

8, மலைகளில் பாயும் அருவிகளில் குளிப்பதற்காகவும் மக்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்து, தங்களது உயிர்களைப் பணயம் வைத்து பயணம் மேற்கொள்வதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *